இங்கிலாந்தில் நடைபெற்ற தொடர் வாகன விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதில் 200 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பனி மூட்டம் நிறைந்து காணப்பட்ட வியாழனன்று காலை, லண்டனை ஒட்டிய கென்ட் பகுதியில் இந்த வாகனங்கள் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக மோதிக் கொண்டன. காயமடைந்தவர்களில் ஆறுபேரின் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சாலைகளின் முச்சந்தியில் இந்த விபத்து நடைபெற்றது. விபத்து நடைபெற்ற சமயம், பனி மூட்டத்தால் சரியாக பார்க்க முடியாமல் இருந்தது என்றும், போக்குவரத்து விளக்குகள் இயங்கவில்லை என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
லாரிகளுக்குக் கீழே சில கார்கள் சென்றுவிட்டன. பலர் தரையில் கிடக்கின்றனர். மீட்புப் பணிகள் அங்கே தொடர்ந்து நடந்து வருகின்றன.
மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்காலம் என்றாலும் விபத்துக்கான காரணத்தை இப்போதே கூற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.